கரூர்: முதல்வர் விஜய் வரும் 10ம் தேதி கரூர் செல்வதற்கு எதிராக தடை கேட்டு உச்ச நீதிமன்றத்தில் திமுக தாக்கல் செய்த இடையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க செல்லும் முதல்வருக்கு தடை கேட்டதற்காக திமுகவை உச்ச நீதிமன்றம் இன்று கடுமையாக கண்டித்தது.
முதலமைச்சரின் பயணத் திட்டத்தை உச்ச நீதிமன்றம் முறைப்படுத்த வேண்டும் என்றும், அவரது பயண அட்டவணையை நாங்கள் தீர்மானிக்க வேண்டும் என்றும் நீங்கள் விரும்புகிறீர்களா?” என்று திமுக வழக்கறிஞரை பார்த்து உச்ச நீதிமன்றம் சராமரியாக கேள்வி எழுப்பியது.
அதற்கு விளக்கமளித்த திமுக சார்பு வழக்கறிஞர் ரஞ்சித் குமார், பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு உதவி வழங்குவதை மனுதாரர் எதிர்க்கவில்லை; ஆனால், முதலமைச்சரும் மற்ற அமைச்சர்களும் இந்த வழக்கின் தகுதி மற்றும் தன்மை குறித்து பொதுவெளியில் கருத்துத் தெரிவிப்பதைத் தடுக்க மட்டுமே கோருகிறோம்” எனறு கூறினார்.
அப்போது குறுக்கிட்ட உச்ச நீதிமன்ற நீதிபதி விஸ்வநாதன், “அப்படியென்றால், பேச்சுரிமைக்கு எதிராக நாங்கள் தடை உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று சொல்கிறீர்களா? அவர்களின் பேச்சுக்கு உங்களது பேச்சின் மூலம் பதில் கொடுங்கள். சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்ட ஒரு வழக்கில், ஓர் அரசியல் எதிரியை இதில் உள்ளே நுழைத்து, அடுத்தடுத்து உத்தரவுகளைப் பிறப்பிக்க உச்ச நீதிமன்றத்தை எவ்வாறு பயன்படுத்த முடியும்?” என்று சரமாரியாக கேள்வி எழுப்பினார்.
மேலும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 10 லட்சம் ரூபாய் நிதியுதவியும், அரசு வேலைவாய்ப்பு ஆணைகளும் வழங்குவது எவ்வாறு சி.பி.ஐ. விசாரணையை பாதிக்கும் என்றும் நீதிபதி விஸ்வநாதன் கேட்டார். இந்த மனு “நன்கு சிந்தித்துதான் தாக்கல் செய்யப்பட்டதா?” என்றும் நீதிபதி திமுக வழக்கறிஞரை பார்த்து கேட்டார். அப்போது வழக்கறிஞர் ரஞ்சித் குமார், “விஜய் இங்கு இரட்டை பொறுப்பு வகிக்கிறார் – அவர் நிர்வாகத்தின் தலைவராகவும் இருக்கிறார், அதே நேரத்தில் இந்த வழக்கின் முதல் குற்றவாளியாகவும் இருக்கிறார்” என்று வாதிட்டார்.
அப்போது குறுக்கிட்ட உச்சநீதிமன்ற நீதிபதி விஸ்வநாதன், வழக்கறிஞரின் கூற்றைத் திருத்தி, எப்.ஐ.ஆர்.-இல் விஜய்யின் பெயர் குற்றவாளியாகச் சேர்க்கப்படவில்லை . “யார் முதல் குற்றவாளி? உங்களது மனுவிலோ அல்லது முந்தைய (திமுக) அரசாங்கத்தால் பதிவு செய்யப்பட்ட எப்.ஐ.ஆர்.-இலோ முதலமைச்சர் (விஜய்) குற்றவாளியாகக் குறிப்பிடப்படவில்லை. தயவுசெய்து உங்கள் தரவுகளைச் சரிபார்க்கவும். ஒருவேளை நான் தவறாகக் கூட இருக்கலாம்” என்று கூறினார்
தொடர்நது விஜய் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் நீரஜ் கிஷன் கவுல், இந்த வழக்கில் விஜய் குற்றவாளி அல்ல என்பதை உறுதிப்படுத்தினார். பின்னர் தி.மு.க. வழக்கறிஞரிடம் பேசிய நீதிபதி விஸ்வநாதன், “அமைச்சர்களாக இருக்கும் சிலர்தான் குற்றவாளிகளாக உள்ளனர், முதலமைச்சர் அல்ல. நீதிமன்றத்தை அரசியல் போர்க்களமாக எப்படி மாற்ற முடியும்?” என்று கேட்டு, இந்த மனுவை விசாரிக்க நீதிமன்றம் தயாராக இல்லை என்பதால், அதைத் திரும்பப் பெறுமாறு அறிவுறுத்தினார். இதையடுத்து திமுகவின் மனு வாபஸ் பெறப்பட்டது.



